×

கோடை காலத்தை முன்னிட்டு கோட்டார் ஆயுர்வேத கல்லூரி சார்பில் பானகம் விநியோகம்: சிறப்பு ஆலோசனை மையம் திறப்பு

நாகர்கோவில், மே 3: நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத கல்லூரி சார்பில், கோடைக்காலத்தை முன்னிட்டு பானகம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு, இந்தாண்டு கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இயல்பை விட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து, வெப்ப அலை வீசி வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி கோட்டாறு அரசு ஆயுர் வேத மருத்துவ கல்லூரி சார்பில், நேற்று முதல் பானகம் விநியோகம் தொடங்கியுள்ளது. இதனை கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது, கோடைக்காலத்தில் வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக உடலில் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும். இதனை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆயுர்வேத மருத்துவ கல்லூரி 4வது பிரிவில் கோடைக்கால ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர் ரமேதா தலைமையிலான குழுவினர் கோடைக்கால நோய்கள் பற்றியும், அதனை தவிர்க்க என்ன செய்யலாம் என விளக்கம் அளிக்க உள்ளனர். இதுதவிர கோடைக்காலத்தில் உடலின் சூட்டை குறைத்து, தாகத்தை தணிக்க பானகம் சிறந்தது. இதனை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று 50 லிட்டர் பானகம் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கோடை காலத்தை முன்னிட்டு கோட்டார் ஆயுர்வேத கல்லூரி சார்பில் பானகம் விநியோகம்: சிறப்பு ஆலோசனை மையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kotar Ayurvedic College ,Panakam ,Special ,Nagercoil ,Kottar Government Ayurveda College ,Dinakaran ,
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...